வளையக்கரணை கிராமத்தில் பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படுமா? Posted on 31-Jul-2018
படப்பை, ஜூலை 31-
வளையக்கரணை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் 2 ஆண்டு காலமாக பூட்டி கிடக்கிறது. அதை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையக்கரணை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் 2 ஆண்டு காலமாக பூட்டி கிடக்கிறது. 1750-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கிராம நிர்வாக அலுவலகம் 2 ஆண்டுகளாக சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செரப்பனஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் ஓய்வூதியம் பெறுவது, சாதி சான்றிதழ், இருப்பிட சான்று, வருமானச்சான்று, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது என எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டி விண்ணப்பம் செய்ய இருந்தாலும் போக்குவரத்து வசதி இல்லாத இந்த பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செரப்பனஞ்சேரி கிராமத்திற்கு சென்று வரவேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக முதியோர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே வளையக்கரணை கிராமத்தில் உள்ள மக்களின் நலன் கருதி ஏற்கனவே இயங்கி வந்த கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளையக்கரணை கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.