ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்க மாட்டேன் இலங்கை அதிபர் சிறிசேனா Posted on 15-Dec-2018
கொழும்பு, டிச.15-
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்யமாட்டேன் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன.
இதற்கிடையே, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 7 பேர் கொண்ட
பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்தது. இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க மாட்டேன். வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை நியமிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.