விமான டிக்கெட்டில் மோடி படம் - ஏர் இந்தியா திரும்ப பெறுகிறது Posted on 26-Mar-2019
புதுடெல்லி, மார்ச் 26-
ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்று இருந்தது, தேர்தல் விதி மீறல் என்பதால் டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்- மந்திரி விஜய்ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டிக்கெட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
அந்த டிக்கெட்டுகள் ஜனவரியில் அச்சிடப்பட்டவை. அதில் உள்ள மோடி, விஜய் ரூபானியின் படங்கள் இடம் பெற்ற விளம்பரம் அப்போது குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது. 3-வது நபர் அளித்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டன.
இந்த டிக்கெட்டுகள் குஜராத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வினியோகிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.