இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பு இல்லை: அமெரிக்கா Posted on 16-Jul-2016
அமெரிக்கா:
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதராங்கள் எதுவும் இல்லை என விசாரணையில் பின் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார், இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான இவர் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை அளித்தார்.
அதில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என தெரிவித்தார்.
ஆனால் இதனை மறுத்துள்ள சவுதி அரேபியா அரசு, இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என தெரிவித்தது.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக அமெரிக்கா அரசு தரப்பில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரசுக்கு தலையீடு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு சந்தேகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.