பாகிஸ்தான்: மார்க்கெட் குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி Posted on 21-Jan-2017
இஸ்லாமாபாத்
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் குர்ரம் பிரதேசத்தில் உள்ள பரச்சினார் நகரில் அமைந்துள்ள ஈத்கா மார்க்கெட் பகுதியில் இன்று அதிநவீன சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது.
இன்று காலை சுமார் 9 மணியளவில் அந்த மார்க்கெட்டில் இருந்த காய்கறி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வெடித்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள பரச்சினார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவிட்டுள்ளார்.