இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது! Posted on 19-Apr-2017
நாகப்பட்டினம், ஏப். 19-
ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 30 வரை நடைபெறும் என்பதால் இந்த 45 நாட்களும் ஆழ் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே நாகையில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பைபர் படகினர் கோலோ மீன் பிடிக்க சில கிலோ மீட்டர் தூரம் சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகையில் இருந்து 45 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் 2 படகுகளில் இலங்கை மீனவர்கள் 11 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள் 11 இலங்கை மீனவர்களை கைது செய்து 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் நாகை கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.