பாகிஸ்தானின் குவெட்டா நகர் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி, 35 பேர் படுகாயம் Posted on 08-Aug-2016
கராச்சி:
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னோ சாலையில் மங்கள் சவுக் அருகில் சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியானதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது. பொதுமக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுளள்து.