ஆதரவாளர்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை Posted on 17-Nov-2017
சென்னை, நவ.17
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன், பார்த்திபன் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டனர். இதை எதிர்த்து அனைவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வரவழைத்து திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படாத மேலும் 3 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் தினகரன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்து கொண்டனர். சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில் தினகரன் திடீரென ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.