ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்! Posted on 08-Dec-2017
சென்னை, டிச.8
அதிமுக வேட்பளார் இ. மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முத ல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் அதிமுகவின் கோட்டையான ஆர்.கே. நகரை கைவிட்டால் அது இனி வரும் தேர்தல்களுக்கு எடுத்துக்காட்டாகி விடும். மற்றொரு புறம் இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியோடு போட்டியிடுவதால் அதற்கான மதிப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் என்று அதிமுகவிற்கு இந்த தேர்தல் பலமுனை நெருக்கடிகளைத் தந்துள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்பது எழுதப்படாத அரசியல் விதியாக தமிழகத்தில் இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு மட்டும் ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இது குறித்து தினகரன் தரப்பினர் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் முறையிட்டுள்ளனர்.
நேற்று காலையில் ஆர்.கே. நகர் தொகுதி கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வர் சாமி கும்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினர். அப்போது, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், செம்மலை, மனோஜ்குமார் பாண்டியன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர். காமராஜ்ஆகியோர் கலந்துகொண்டனர். பிரச்சாரத்தையொட்டி ஆர்.கே. நகரில் கரகாட்டம், தப்பாட்டம் என்று வரவேற்புகள் தடபுடலாக இருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரிக்க வழக்கமாக பச்சை நிற சேலையில் வரும் அதிமுக மகளிரணியினர் நேற்று கேரள பாரம்பரிய சேலையில் வந்து கலச கும்பங்களை ஏந்தி நின்றனர். அதிமுகவின் அருமை பெருமைகளையும், ஜெயலலிதா இந்த தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்களையும் கூறி முதல்வரும், துணை முதல்வரும் திறந்த ஜீப்பில் வந்து வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஜெயக் குமார், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், அதிமுக நிர்வாகிகள், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் திறந்த ஜீப்பில் பயணித்தனர்.